ஈரானில் பதற்றம் - ஹிஜாப் விவகாரத்தால் உயிரிழந்த இளம் பெண்; விஸ்வரூபம் எடுத்துள்ள போராட்டம்!

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிரான மக்கள் புரட்சி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், ஈரானில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணையின் போது கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாஷா அமினிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்துள்ளது. எனினும் கடந்த 17ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், மாஷா அமினி மாரடைப்பு ஏற்பட்டதனாலேயே உயிரிழந்ததாக ஈரான் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 18ஆம் திகதி முதல் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் ஈரானில் தீவிரமடைந்துள்ள நிலையில் வேறு நாடுகளுக்கும் போராட்டம் பரவி வருகிறது.

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக துருக்கியில் இஸ்லாமிய பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமன்றி, கனடாவிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது