படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமைய செயலாளர் க. நிதர்சன் ஏற்றி வைக்க, உருவப் படத்திற்கான மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர் ம. நியூட்டன் அணிவித்தார்.

தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

போர்ச் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன்.

அவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

அந்த நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதன் போது அவர் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை மீது வீழ்ந்தவாறே உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டனர்.

அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.