யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 15 இளைஞர்கள்!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,நேற்றைய தினம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியங்காடு, கோப்பாய், யாழ்ப்பாணம் ,நல்லூர் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முற்படுத்தப்படவுள்ளனர்.