சீனாவுக்கு ஏற்றுமதியாகும் 100000 குரங்குகள் - வெளியாகிய காரணம்..!



100,000 குரங்குகளில் முதல் தொகுதி குரங்குகள் சீனாவின் ஆய்வுகூடங்களுக்குச் செல்லலாம் என சுற்றுச் சூழல் நீதிமைய நிர்வாகப் பணிப்பாளர் ஹேமன்த விதானகே தெரிவித்துள்ளார்.

இந்தக் குரங்குகள் ஒப்பனைப் பொருட்களுக்கான பரிசோதனைகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சீனாவில் 18 மிருகக் காட்சி சாலைகள் மட்டுமே உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் சராசரியாக 5,000 குரங்குகள் இருக்கின்றன. எனவே இந்தக் குரங்குகள் சீனாவிலுள்ள மிருகக் காட்சிசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன எனும் கூற்று நம்பகத்தன்மையற்றதாகும்“.

“100,000 குரங்குகளை அரசாங்கம் சீனாவிற்கு அனுப்பினாலும் நாட்டில் குரங்குகளின் தொகை குறையாது. இந்தக் குரங்குகள் சீனாவிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்படுவதாக இருந்தால் அவை இலங்கை மிருகக் காட்சிசாலைகளிலுள்ள விலங்குகளைப் போலவே பராமரிக்கப்பட வேண்டும்.

எமது மிருகக் காட்சி சாலைகளில் 100,000 டோக் இனக் குரங்குகள் இல்லை. எனவே இந்நிலைமையை நாட்டு சட்டத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது“ என விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த மிருகங்களை தலதா மாளிகைப் பகுதி, அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை போன்ற பிரதேசங்களிலிருந்து பிடிக்க வேண்டும். அங்கு வாழ்வதற்கு எம்மைப் போலவே அந்தக் குரங்குகளுக்கும் உரிமையுள்ளது.

எனவே குறித்த பிரதேசங்களிலிருந்து குரங்குகளை அகற்றி சீன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி அவற்றை சித்திரவதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது“.

“அமைச்சர் இந்த தீர்மானத்தை ரத்து செய்வார் என நாங்கள் நம்புகின்றோம். மிருகங்களை வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சர் தனித்து முடிவெடுக்க முடியாது.

ஆனால் வனவிலங்குகள் பணிப்பாளர் நாயகத்தால் நிலைமையை நியாயப்படுத்தி தீர்மானம் மேற்கொள்ள முடியும். அவ்வாறு செய்யப்படாவிட்டால், தற்போதைய வனஜீவராசிகள் சட்டத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் நீதிமையம் (CEJ) சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்“ என விதானகே மேலும் தெரிவித்தார்.