'அரசாங்கத்திலிருந்து விலகுவோம்.." : ஜனாதிபதி ரணிலுக்கு மொட்டு கட்சியினர் விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நடைமுறைப்படுத்தினால் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரித்துள்ளது.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாலித்த ரங்கே பண்டார தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி பொறுப்பேற்கவில்லை என்றால், நாட்டுக்கு அறிக்கை விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியை தவிர வேறு எவரேனும் நாட்டுக்கு கேடு விளைவித்தால் அதற்கு கட்சி என்ற ரீதியில் எப்பொழுதும் எதிர்ப்பை தெரிவிப்போம், தவறு நடந்தால் அவர் நிச்சயம் அரசாங்கத்தை விட்டு விலகுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக நடத்துவதே தமது கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவின்  நிலைப்பாடு, இந்த நிலையில் எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்கக் கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்து பெரமுனவிற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

வாக்குறுதியளித்தபடி ஜனாதிபதி ரணில்,  ஐக்கிய மக்கள் சக்தியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் வெற்றிகரமாக இணைத்துக் கொண்டால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு அவருக்கு ஆதரவளிக்கும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜூன் 15 ஆம் திகதிக்குள் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், ஜூன் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பில் மொட்டு இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.