அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது.
ஏற்கனவே, இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது.
சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.
இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.
அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும்.
டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கனடா மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், மெக்ஸிகோவும் கனடாவும் வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஒருபோதும் நல்லது செய்ததில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கனேடிய நிர்வாகம், எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் எரிசக்தி ஏற்றுமதியை ரத்து செய்யவும் சில பொருட்கள் மற்றும் வளங்கள் மீது ஏற்றுமதி வரி விதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கனேடிய நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.