உக்ரேன் - ரஷ்யா போர் நிறுத்தத்திற்காக பேசி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோவில் இணைவதை உக்ரேன் மறப்பது நல்லது என தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அயல் நாடான உக்ரேன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரேன் மீது போரைத் தொடங்கியது.
கடந்த 3 ஆண்டு காலமாக இந்த போர் நடந்து வரும் நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இந்த போர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் ட்ரம்ப் ஆரம்பம் முதலே ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உக்ரேன் ஜனாதிபதியாக ஜெலன்ஸ்கி இருந்து வரும் நிலையில், உக்ரேனில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரேனை நேட்டோவில் இணைப்பதுடன், போர் நிறுத்தமும் செய்யப்பட்டால் தானே பதவி விலகுவதாக ஜெலன்ஸ்கி அறிவித்தார்.
இந்நிலையில் அண்மையில் கருத்து தெரிவித்த ட்ரம்ப் “உக்ரேன் நேட்டோவில் இணைவது தொடர்பான பிரச்சினையே இரு நாடுகளுக்கும் இடையேயான போருக்கு முக்கியமான காரணமாக உள்ளது. உக்ரேன் நேட்டோவுடன் இணையும் திட்டத்தை மறந்து விடுவது நல்லது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரேனுக்கு முடிந்த வரை இழந்த பகுதிகளை அதிகமாக கிடைக்க செய்வதற்கு அமெரிக்க முயற்சிக்கும்” என கூறியுள்ளார்.
பொதுவாக அமெரிக்கா, ரஷ்யா இடையே எப்போதும் ஒரு பகைமை நிலை இருந்து வருவதால் ட்ரம்ப், உக்ரேனுக்கு சாதகமாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் புடினுக்கு ஆதரவாக தெரிவித்துள்ள கருத்து, உக்ரேனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.