கொழும்பு மாநகர சபையில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் 52வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியுமென்று இருந்த நிலையில், எதிர்க்கட்சியுடன் இணங்கியிருந்த சில தரப்பினருடன் இறுதி நேரத்தில் ஜனாதிபதி ஊடாக இரகசிய பேச்சுக்களை நடத்தி, இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே முஜிபூர் ரஹ்மான் இதனைக் கூறினார்.
உள்ளூராட்சி சபைகள் கட்டளைகள் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கமைய சபையின் தலைவரை தெரிவு செய்யும் போது அதற்காக இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதா? பகிரங்க வாக்கெடுப்பை நடத்துவதா? என்று தெளிவாக கூறப்பபட்டுள்ளது.
அதாவது பகிரங்க வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் உள்ளூராட்சி ஆணையாளர் கொழும்பு மாநகர சபைக்கு வரும்போதே இரகசிய வாக்கெடுப்புக்கு செல்வதாகவே தீர்மானித்தே வந்துள்ளார். அவர் சபையில் கேட்டே இந்த தீர்மானத்தை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜே.வி.பியினர் பாராளுமன்றத்தில் எப்போதும் பகிரங்க வாக்கெடுப்புக்காகவே முன்னின்றுள்ளனர். இரகசிய வாக்கெடுப்புக்கு அவர்கள் முன்னின்றது இல்லை.
இந்நிலையில் அவர்களின் டீல் அரசியலை முழு உலகுக்கும் காட்டியுள்ளனர். புதிய அரசியல் கலாச்சாரத்திற்காக மக்கள் அவர்களுக்கு வாக்களித்திருந்த நிலையில் அதனை மீறியுள்ளனர்.
பகிரங்க வாக்கெடுப்புக்கு செல்லாது இரகசிய வாக்கெடுப்புக்கு சென்றுள்ளனர். இதில் வெற்றிப்பெற முடியாது எப்படியாவது டீல் போட்டு சலுகைகளை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொள்ளவே முயன்றுள்ளனர்.
அவர்களால் பகிரங்க வாக்கெடுப்பில் 52 வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி மாளிகையில் நடந்த சந்திப்பின்போது 55 வாக்குகளே இருந்தன. இதனால் அவர்களால் தோல்வி உறுதி என்பதனால் சுயேச்சைக்குழு உள்ளிட்ட சில தரப்பினருடன் இரகசிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி இரகசிய வாக்கெடுப்பை நடத்தி வெற்றிபெற்றுள்ளனர்.
ஏன் இரகசிய வாக்கெடுப்புக்கு செல்ல ஏன் ஆணையாளர் ஊடாக இந்தளவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்று எப்படி கொடுக்கல் வாங்கலை செய்தாவது வெற்றிப்பெறவே முயற்சித்துள்ளனர்.
எங்களுடைய கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் இரகசிய வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு வாக்களிப்பாளர்காக இருந்தால் ஏதோ டீல் இருக்க வேண்டும்.
அந்த டீல் என்னஎன்று எதிர்வரும் நாட்களில் தெரியவரும். ஒவ்வொரு சலுகைகளும் வழங்கப்படும் போது அதனை தெரிந்துகொள்ளலாம். அரசியல்கட்சிகள் எங்களுடன் இருந்தாலும் சில சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் தான் இவ்வாறு டீல்போட்டுள்ளனர்.
சபையில் நடந்துகொண்டமுறை தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களை அடையாளம் கண்டுள்ளோம் என்றார்.