இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் வரிக்கு பின்னர் இலங்கையில் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன் விலை கொண்ட டொயோட்டா ரேய்ஸ் 1200 சிசி ஹைப்ரிட், இறக்குமதி செய்யும் போது 6.4 மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கைக்கு டொயோட்டா ரேய்ஸை இறக்குமதி செய்வதற்கான விலை சுமார் 13.8 மில்லியன் ரூபாய்களாகும், எனினும் அது உள்ளூர் சந்தையில் சுமார் 16.5 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா வெசல் எக்ஸின் விலை ஜப்பானில் 8.8 மில்லியன் ரூபாய்கள், அதற்கு வரியாக 9 மில்லியன் விதிக்கப்படுகிறது.
எனவே, வெசல் எக்ஸ் இறக்குமதி செய்வதற்கான விலை 17.8 மில்லியன் ரூபாயாகும் எனினும் அது இலங்கையில் 21 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தாய்லாந்திலிருந்து வரும் டொயோட்டா ஹிலக்ஸ் ஜிஆர் ஸ்போர்ட்டின் இறக்குமதி செலவு 15 மில்லியன் செலவாகும், இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது 13 மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.
வரிக்குப் பிறகு, டொயோட்டா ஹிலக்ஸ் இறக்குமதியின் விலை 28.5 மில்லியன், ஆனால் அது இலங்கையில் சுமார் 32 மில்லியனுக்கு விற்கப்படுகிறது.
ஜப்பானில் இருந்து 6.5 மில்லியன் மதிப்புள்ள டொயோட்டா யாரிஸ் கிராஸக்கு, இறக்குமதி செய்யும் போது 8.9 மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.
எனவே அதன் மொத்த இறக்குமதி செலவு 15.4 மில்லியன் ஆகும், ஆனால் அது இலங்கையில் 19.5 மில்லியனுக்கு விற்கப்படுகிறது.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 250, வாகனம் 18 மில்லியன் ரூபாய்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, வரிக்கு பின்னர் இலங்கையில் 65 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேநேரம் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பான எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் எவ்வித தொடர்பாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு சிறிது சிறிதாக மீட்சிப் பாதையில் செல்வதால், சில வருடங்களின் பின்னர் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து ஜூன் மாதம் இறுதி வரை கிட்டத்தட்ட 18,000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், குறித்த காலகட்டத்தில் 13,614 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், அவ்வாறான எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி திறைசேரிக்கு எந்த ஆலோசனையோ அல்லது பரிந்துரையோ வழங்கவில்லை என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்