“மோடியை கொல்ல தயாராக இருங்கள்...” - காங்கிரஸ் மூத்த தலைவரின் பேச்சால் எழுந்த சர்ச்சை


“நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியைக் கொலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் என்ற நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்ததாவது, 

"சாதி, மத, மொழி அடிப்படையில் மக்களைப் பிரித்து, வரும் தேர்தலை மோடி முடித்துவிடுவார். தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் ஆகியோர் ஆபத்தில் உள்ளனர். அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், மோடியைக் கொல்ல தயாராக இருங்கள்" என தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ராஜா படேரியா மீது மத்தியப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பிறப்பித்திருந்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நரோத்தம் மிஸ்ரா, "ராஜா படேரியாவின் பேச்சு, தற்போதைய காங்கிரஸ் மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அல்ல என்பதைக் காட்டுகிறது. இது இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் சிந்தனையால் பாதிக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ்" என விமர்சித்துள்ளார்.

அத்துடன், ராஜா படேரியாவின் கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், "பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் இதயங்களில் வாழ்கிறார். ஒட்டுமொத்த நாட்டின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருக்கிறார். தேர்தலில் அவரை எதிர்த்து காங்கிரசால் வெல்ல முடியாது.

எனவேதான் அவர்கள் நரேந்திர மோடியின் மரணத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது சகிப்பின்மையின், வெறுப்பின் உச்சம். காங்கிரஸ் கட்சியின் உண்மையான எண்ணம் தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற பேச்சுகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜா படேரியாவின் கருத்து தொடர்பில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்ததாவது, "மன ரீதியாக தான் ஆரோக்கியமாக இல்லை என ராஜா படேரியாவே கூறினாலும்கூட, இந்தக் குற்றத்தில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. அவருக்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  மோடியை கொல்லத் தயாராக வேண்டும் என நான் கூறியது தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான். "நான் ஒரு காந்தியவாதி. அவரது அகிம்சை கொள்கையை பின்பற்றுபவன்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியா விளக்கமளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.