'பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும்.." : கூட்டமைப்பினருக்கு சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை


பௌத்த மதத்தின் பெருமைக்குரிய சியாம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஷ்டானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் பாரிய அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாரளுமன்றில் நேற்றைய தினம் (11.05.2023) உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,

தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தை மாற்ற வேண்டும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையாக தூபி காணப்படுகிறது. ஏனெனில், இலங்கை ஒரு பௌத்த நாடு. ஆகவே, எக்காரணங்களுக்காகவும் தொல்பொருள் சின்னத்தை மாற்றியமைக்கப் போவதில்லை.

புராதன தொல்பொருள்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல இனங்களுக்கும் உண்டு. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை அமைத்து கோயிலை கட்டுவது முறையற்றது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் பேசும் மக்களை யுத்த பகடைக்காயாக பயன்படுத்தி செயற்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட தமிழ் பிரிவினை அரசியல்வாதிகள் கொழும்பில் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.

தமிழ் மக்கள் தொடர்பில் அப்போது கரிசனை கொள்ளவில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவர்கள் தமிழர்களின் நலன் விரும்பிகள் போல் கருத்துரைக்கிறார்கள்.

சுமந்திரன் உட்பட பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழிக்க ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, வெறுப்பு பேச்சுக்களை வடக்கில் குறிப்பிட்டுவிட்டு கொழும்பில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றார்.