'அம்மாவின் கழுத்தை நெரித்து நானே கொலை செய்தேன்..! " யாழில் கைது செய்யப்பட்ட மகன் அதிர்ச்சி வாக்குமூலம்!



நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில்,

அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் என 16 வயது சிறுவன் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் எனும் 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.

மறுநாள் குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததுடன், வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

இதனையடுத்து காணாமற் போன 16 வயது சிறுவன் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் சிறுவன் தொலைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் எனவும், அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.