'கடற்படையினரின் உயிருக்கு ஆபத்து காரணமாகவே மீனவர்களை சுட்டோம்.." : கடற்படை விளக்கம்

 

திருகோணமலை - குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடற்படை விளக்கமளித்துள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்படை ஊடகப் பேச்சாளர்  கமாண்டர் புத்திக சம்பத்,
 
குச்சவெளி கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டதாக கூறி 48 இலங்கை மீனவர்கள் அண்மையில் 11 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 
அதனைத் தொடர்ந்து அவர்களைக் கரைக்கு அழைத்துவர முற்பட்டபோது, அவர்கள் கடற்படையினரின் பிடியிலிருந்து தங்களின் படகை விடுவித்துத் தப்பிச் செல்ல முற்பட்டனர்.
 
இதன்போது கடற்படையினர் எச்சரிக்கை விடுத்ததுடன், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர்
எனினும் அவர்கள் தொடர்ந்தும் தப்பிச்செல்ல முற்பட்டதால் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குக் கடற்படையினர் முயன்றுள்ளனர்.
 
 
இதன்போது, குழப்ப நிலை ஏற்பட்டதாகவும், தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றதால் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் மீனவர் ஒருவர் காயமடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 
குறித்த மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியின்போது, கடற்படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்தநிலையில், இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் குச்சவெளியில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், பலரும் இதற்குக் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேநேரம் இந்த குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொதுபாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில், நமது கடற்றொழிலாளர் தீவிரவாதிகள் போல் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

 கடற்தொழில் திணைக்களத்தில் முறையாக சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் பெற்று கடலுக்கு சென்ற கடற்றொழிலாளரகள் மீதே கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்பாவி சமூகத்தினர் மீது, கடற்படை பாதுகாப்பு தரப்பினர் அத்துமீறு நடப்பதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் கூறியுள்ளார்.

--