அதானியின் ஒரு பில்லியன் முதலீட்டை இழந்தமை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். நட்பு நாடான இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் உக்ரைனை விட மோசமான நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
களுத்துறையில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர்,
அதானி நிறுவனத்தின் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டை இழந்துவிட்டு எவ்வாறு இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்? உக்ரைன் ர்ஷாவுடன் மோதி, இன்று படு பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.
அதேபோன்று தான் இந்தியாவுடன் மோதினால் இலங்கையும் அழிவுப் பாதையில் செல்லும். நட்பு நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை எவ்வாறு பேணுவது என்பதற்கு அனுபவம் தேவை. அது இந்த அரசாங்கத்துக்கு இல்லை என்றார்.
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஒவ்வொருவராகக் கைது செய்து கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்களை விடுத்து, சில்லறை மோசடியாளர்களையே கைது செய்கின்றனர். தற்போது கைது செய்யப்படும் அனைவரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்படுவது முக்கியமல்ல. உரிய சாட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக பெரும்பாலான வழக்குகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
கடன் மறுசீரமைப்பு, கடன் மீள் செலுத்தல், ட்ம்ப்பின் வரிக் கொள்கை என பாரதூரமான பிரச்சினைகள் முன்னிருக்கும் போது அரசாங்கம் இவற்றில் ஆர்வமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தாகும் என்றார்.