'நெவில் டி சில்வாவே துப்பாக்கி சூடு மேற்கொள்ளுமாறு கூறினார்.." தேசபந்து விவகாரத்தில் அம்பலமான தகவல்



மாத்தறை, வெலிகம ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக தான் உள்ளிட்ட குழுவுக்கு அப்போதைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வாவே உத்தரவிட்டதாக அந்த பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் டி சில்வா தெரிவித்தார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன் நேற்று நான்காவது நாளாக முன்னிலையானார்.

அப்போது, 24ஆவது சாட்சியாகப் பெயரிடப்பட்ட, தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட, கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் டி சில்வாவிடம் குழு விசாரணைகளை மேற்கொண்ட போது, 

ஹரக் கட்டா என்றும் அழைக்கப்படும் நடுன் சிந்தக தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவு வந்ததா என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, அன்ஸ்லம் டி சில்வா பின்வருமாறு கூறினார்.

"டிசம்பர் 30, 2023 அன்று, அப்போதைய கொழும்பு குற்றப் பிரிவின் பதில் பணிப்பாளர் நெவில் டி சில்வா, அதிகாரிகள் குழுவுடன் வெலிகமவுக்கு வந்து செல்லுமாறு என்னைக் கேட்டார். பாதாள உலகத்துடன் தொடர்புடைய ஒரு குழுவிற்கு அங்குள்ள ஒரு ஹோட்டலில் ஒரு விருந்து இருப்பதாகவும், அந்த இடத்திற்குச் சென்று சுவரிலும் ஹோட்டலின் பெயர் பொறிக்கப்பட்ட பலகையிலும் சுட வேண்டும் என்று கூறினார். அந்த நோக்கத்திற்காக வெளியே சென்ற குழுவின் தலைவராக நான் செயற்பட்டேன். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, நாங்கள் கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்தோம்.
நாங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, மற்றொரு துப்பாக்கிச் சத்தம் கேட்டது. பின்னர் எங்களுடன் வந்த உபுல் என்ற அதிகாரி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வீழ்ந்துக் கிடந்தார். என்னுடன் இருந்தவர்களிடம் 'சீக்கிரம் புறப்படுங்கள்' என்று சொன்னேன்.
அங்கு ஒரு பேருந்தில் சுமார் 20 விசேட அதிரடிப் படையினர் இருந்தனர். அவர்களின் பேருந்து தாமதமாக புறப்பட்டதால் நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம். இல்லையெனில், உபுலுடன் சேர்ந்து நாங்களும் இறந்திருப்போம்.

நெவில் டி சில்வா, எங்களிடம் பொய் சொன்னார். வெலிகம பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துவிட்டே நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் எங்களிடம் குறிப்பிட்டார்."


"தேசபந்து இதைப் பற்றி உங்களிடம் கேட்டாரா?" என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கேட்டார்.

"இல்லை," என அன்செல்ம் டி சில்வா பதிலளித்தார்.

பின்னர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்,

பிரேத பரிசோதனை நடத்திய சந்தர்ப்பத்தில் அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையின் போது, மூன்றாம் தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குறிப்பிட்டீர்கள். இந்தக் கதையை உருவாக்கியது யார்? என்று கேட்டார்.

"சம்பவத்திற்குப் பிறகு, நெவில் டி சில்வா வெலிகமவுக்கு வந்தார். இதுபோன்ற ஒரு கதையைச் சொன்னால், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று அவர் கூறினார். அதன்படி, இந்தக் கதையை நாங்கள் நீதிமன்றத்திற்குச் சொல்வோம் என்ற கூட்டு நிலைப்பாட்டிற்கு வந்தோம்.
எனவே, நாங்கள் அந்தக் கதையை அப்படியே சொன்னோம். மரண விசாரணையின் போதிலும், நீதவான் நீதிமன்றத்திலும், முதல் முறையாக வாக்குமூலம் அளிக்கும்போது, நாங்கள் ஒரு ஜோடிக்கப்பட்ட கதையைச் சொன்னோம். இந்தப் பிரச்சினை தொடரும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். பின்னர் நான் குற்றவியல் விசாரணைக்குச் சென்று உண்மைக் கதையைச் சொன்னேன்." என்று அன்செல்ம் டி சில்வா குறிப்பிட்டார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி எஸ். வீரவிக்ரம, சாட்சியிடம் விசாரணை நடத்தத் தொடங்கினார்.

வெலிகமவில் உள்ள ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது கூட, ஒரு பொலிஸ் அதிகாரியாக, தண்டனைச் சட்டத்தின்படி, எந்தவொரு சொத்து மீதும் துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா?

"நாங்கள் அதை அறிந்தே செய்தோம். நெவில் டி சில்வாவின் உத்தரவின் பேரில் இதை அறிந்தே செய்தோம்," என்று அவர் பதிலளித்தார்.

"சட்டவிரோத உத்தரவாக இருந்தும், அதை ஏன் பொலிஸ் வாக்குமூல அறிக்கையில் எழுதப்படவில்லை?" என்று சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.

மேலிடத்திலிருந்து வரும் அனைத்து தவறான உத்தரவுகளையும் நாம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நாம் பொலிஸ் உள்ளே இருந்தால், நமக்கு மேலே உள்ள அதிகாரிகள் சொல்வதைச் செய்ய வேண்டும். இல்லையெனில், பொலிஸ் துறையில் நீடிக்க முடியாது. என்று சாட்சி பதிலளித்தார்.

இது குறித்து நெவில் சில்வாவுக்கு மேலே உள்ள அதிகாரிகளிடம் ஏன் இது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்று கேட்டபோது, சாட்சி, "நான் அப்படிச் சொன்னாலும் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் நான் அப்படிச் சொல்லவில்லை" என்றார்.

உங்களுடன் சுடச் சென்ற எட்டு பேரில் ஒருவர் இறந்துவிட்டார். ஆறு பேர் மட்டுமே இங்கே இருக்கிறார்கள். மற்றவருக்கு என்ன ஆயிற்று? சட்டத்தரணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அவர் கடந்த டிசம்பரில் வெளிநாடு சென்றதாகக் கூறினார்.

மேலும், அன்று வெலிகமவுக்குச் சென்றபோது ஏன் இரண்டு போலி எண் தகடுகளை எடுத்துச் சென்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சாட்சி  

நாங்கள் ஒரு பொலிஸ் வாகனத்தில் சென்றோம். அந்த வாகன உரிமத் தகடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே நாங்கள் இரண்டு போலி வாகன உரிமத் தகடுகளை எடுத்துச் சென்றோம்.

உயர் அதிகாரிகள் எங்களுக்கு அளித்த முடிவுகளால் நான் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். இன்று எனக்கு ஓய்வூதியம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் இதை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு பதிலாக அவர்களை இடமாற்றம் செய்தால் நல்லது என குறிப்பிட்டார்.

--