இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தான் முறைப்பாடு செய்து ஒரு மாதம் கடந்துள்ள போதும் இதுவரையில் எவ்வித முறையான பதிலும் தனக்குக் கிடைக்கவில்லை என சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்
பதில் பொலிஸ் துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துக் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகேவினால் இந்தமுறைப்பாடு செய்யப்பட்டது.
இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே தான் முறைப்பாடு செய்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரையில் எவ்வித முறையான பதிலும் தனக்குக் கிடைக்கவில்லை என, சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனது கடிதம் கிடைக்கப்பெற்று, 7 வேலை நாட்களுக்குள் பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது முறைப்பாடு தொடர்பில் கோப்பு இலக்கம் மாத்திரமே இதுவரையில் கிடைத்துள்ளதாகவும் எனவே பொலிஸாரின் பதிலைப் பெறுத்தே நாம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே, குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரால் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நீதிமன்றில் அடிப்படைஉரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் மனித உரிமை நிறுவனங்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.