யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டொலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
மின்சார உற்பத்திக்கு மாத்திரமே அணுசக்தியை பயன்படுத்துவோம் என கூறிவந்த ஈரான், அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கியது.
இதை தடுத்து நிறுத்துவதற்காக ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.
இது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் ஓமனில் நடந்துவந்தன. 6-ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்ததால், அமெரிக்கா ஈரான் அணு சக்தி தளங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது.
யுரேனியம் செறிவூட்டலை ஈரான் முற்றிலும் கைவிட்டால், அணு மின்சக்தி உற்பத்தி திட்டத்தில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு, ஈரான் மீதான தடைகள் நீக்கப்படும், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட ஈரான் பணம் 6 பில்லியன் டொலர் விடுவிக்கப்படும், அமெரிக்கா குண்டு வீசி அழித்த ஃபர்தோ யுரேனியம் செறிவூட்டல் மையம், அணுமின் சக்தி நிலையமாக மாற்றப்படும் என ஏராளமான சலுகைகளை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறுகையில், ‘‘ஈரானுடன் விரிவான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறோம். யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கைவிட்டு அணு மின்சக்தி திட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தத்தில் முக்கிய பங்காற்றிய கட்டார், அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.