'போதை பொருள் கடத்தல், உற்பத்தி பின்னணியில் இந்தியா, சீனா.." பரபரப்பு தகவலை வெளியிட்ட ட்ரம்ப்



போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு தகவை வெளியிட்டுள்ளார்.
 

ட்ரம்ப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 
இந்த நாடுகள் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்தல் என்பது அதிகமாக உள்ளது.
போதைப் பொருளை உற்பத்தி செய்வது, கடத்துவது போன்ற செயல்கள் மிகுந்திருப்பதால் இந்த நாடுகள் அமெரிக்காவுக்கும் அதன் குடிமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
 
போதைப் பொருளால் அமெரிக்காவில் 18 முதல் 44 வயது வயதுக்கு உட்பட்டோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் இந்த நாடுகளுடன் அமெரிக்காவுக்கு நல்லுறவு இல்லை,
இந்த நாடுகள் போதை ஒழிப்பில் திறம்பட செயற்படவில்லை என்று அர்த்தம் இல்லை.
 
இவற்றில் ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியன்மார், கொலம்பியா மற்றும் வெனிசுலா நாடுகள் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு ட்ரம்ப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இவ்விகாரத்தில் சீனாவைப் பற்றி ட்ரம்ப் கூறுகையில், “ஃபெண்டானில் போன்ற போதை மருந்துகள் உருவாக்கத்துக்கான மூலப் பொருட்களை பெருமளவில் வழங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது என பல இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
 
சீனா சின்தடிக் போதை பொருட்களான நிடாசெனஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் தயாரிப்பிலும் முதலிடத்தில் உள்ளது.
சீன அரசு இதுபோன்ற ஆபத்தான வேதிப் பொருட்கள் போதைப் பொருள் தயாரிப்பு, கடத்தல் கும்பல் வசம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.


ஆப்கானிஸ்தான் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,  “போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து தலிபான் மிகப்பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனாலும் அது எதுவுமே நடைமுறைப் படுத்தவில்லை.” என்று ட்ரம்ப் கூறினார்.

இந்தியாவும், சீனாவும் போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள், உபகரணங்களை விநியோகிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என அமெரிக்க புலனாய்வுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
 
போதைப் பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட வருமானமானது, எல்லைகள் கடந்து குற்றவாளிகளுக்கு நிதி ஆதாரம் அளிக்கிறது,
தீவிரவாதச் செயல்களுக்கான நிதித் தேவையை பூர்த்தி செய்கிறது. தலிபான் உறுப்பினர்கள் சிலர் இன்னமும் போதைப் பொருள் விற்பனை மூலம் வரும் பணத்தால் செழிப்புடன் இருக்கின்றனர்.
 
ஆப்கானிஸ்தான் இவ்விவகாரத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.