திருமண நிகழ்வில் நடனமாடிய யுவதிக்கு நேர்ந்த துயரம்

திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி, தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கு கூட்டத்துடன் உல்லாசமாக நடனமாடியுள்ளதாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த போது அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் சுகவீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.