திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞர் தலாவ-தம்பகஹவெல,பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என். நளின் பிரியன்த (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நேற்று 16ம் திகதி திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இருவர் மீட்கப்பட்டதுடன் குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் கடற்படையினரும், உப்புவெளி பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டிருந்த போதிலும் குறித்த இளைஞர் கிடைக்கப்பெறாத நிலையில் இன்று காலை சடலம் கரை ஒதுங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம்  பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.