யாழில் மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு! புலன் விசாரணையில் அம்பலமான பின்னணி

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் கிரிசாந் (மிராஜ்) என அழைக்கப்படும் 35 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அருகில் உள்ள விருந்தினர் விடுதி பணியாளர்கள் 10 பேரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிதாக கட்டப்பட்டு வரும் குறித்த கட்டடத்தில் வேலை செய்யும் குழு ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு அருகில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய பின்னர் மது போதையில் விடுதியில் குழப்பத்தினை ஏற்படுத்தி , விடுதி பணியாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி தாம் வேலை செய்யும் புதிய கட்டடத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் (14) வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாண காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விடுதி பணியாளர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  


முதலாம் இணைப்பு  

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் உள்ள கட்டடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உயிரிழப்பு தொடர்பில் காவல்துறையினர் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று (14) காலை சம்பவ இடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த 32 வயதுடைய கட்டடப் பணியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் காவல்துறை விசாரணையில் உள்ளனர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.