மதுபோதையில் வந்த கணவரை கொலை செய்த மனைவி : மாத்தறையில் சம்பவம்

 
 

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  சம்பவம் பதிவாகியுள்ளது.

42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்றுமுன்தினம் இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றுள்ளார்.

இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.

பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.