இந்திய அமைதிப் படை இலங்கைக்கு வந்தது ஏன் - காலம் கடந்து வெளிவந்த தகவல்

  

விடுதலைப்புலிகளை தோற்கடிக்கவே இந்திய அமைதிகாக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக முன்னாள் கடற்படை அதிகாரியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர காலம் கடந்து உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

வரவு - செலவு திட்டம் மீதான நேற்று முன்தினம் (17) நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிரிவினைவாத கருத்துகள் வளர்ச்சியடையும். இதனால், பூகோளரீதியாக பலமான நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.

இதனாலேயே விடுதலை புலிகளை தோற்கடிக்க இந்திய அமைதிக்காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. எனினும் இதில் ஏற்பட்ட தோல்விகளாலேயே இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது என்றார். 

வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் இலங்கையிலிருந்து அம்மாகாணங்கள் பிரிந்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, ஒருபோதும் அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடாது. மாறாக கண்டிப்பாக அதிகாரப் பரவலாக்கத்தையே வழங்க வேண்டும். இதுவே இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு எனவும் தெரிவித்தார்.