யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி எம்மை ஏமாற்ற முடியாது..! இடித்துரைத்தார் சம்பந்தன்

நாட்டின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை தினமான நேற்று தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

" தமிழர்களின் வாழ்வில் அமைதி ஏற்பட்டு மக்கள் முன்னேற்றகரமாக வாழக்கூடிய வகையில் இலங்கையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும். இந்த புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

இவ் விடயம் சம்பந்தமாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். வழைமை போல் இலங்கை அரசாங்கம் இந்த கருமத்தை செய்யாமல் இழுத்தடிக்க முடியாது.

கடந்த கால கசப்பான சம்பவங்களால் நாங்கள் விரக்தி நிலையில் நிற்கின்றோம். எனவே தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் அசண்டயீனமாக செயற்பட்டால் தமிழ் மக்களின் நலன் கருதி நாங்கள் தீர்க்கமான முடிவு எடுப்போம்.

சர்வதேச சமூகத்தை இந்த கருமத்தில் நேரடியாக பங்கெடுக்க செய்து தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு வழிவகுக்குமாறு நாங்கள் கோருவோம். இலங்கையின் ஆட்சியில் எவர் இருந்தாலும் இனி எம்மை ஏமாற்றவே முடியாது ", எனக் குறிப்பிட்டார்.