விக்னேஸ்வரனுக்கு என்ன உரிமை உள்ளது -சரத்வீரசேகர ஆவேசம்

 65 வருடங்கள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு அங்கு வசிக்க முடியாது என விக்னேஸ்வரன் கூறுவது எந்தவகையில் நியாயமானது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் 72 சத வீத பௌத்தர்களும், 12 சத வீத இந்துக்களும், 9.7 சத வீத முஸ்லிம்களும், 6.3 கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து எமது நாட்டில் தேரவாத பௌத்தம் இருந்ததுடன், எமது அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களவர்களுக்கு ஒரே நாடே இலங்கை. இதனாலேயே இலங்கையை ‘சிங்களே' என்று முன்னைய காலத்தில் அழைத்துள்ளனர்.

இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு சிங்களவர்களுடையது. நாட்டை எதிரிகள் கைப்பற்ற முயன்ற போது அவர்களை சிங்களவர்களே தோற்கடித்தனர்.

நாட்டை பாதுகாத்தாலே சிங்கள இனத்தை பாதுகாக்க முடியும். சிங்கள இனத்தை பாதுகாத்தாலே சாசனத்தை பாதுகாக்க முடியும்.இதனால் சாசனத்தை பாதுகாக்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் நிலம் என்று கூறுவதற்கான பொய்யான வரலாறுகளை காட்டுகின்றார். அவர் வடக்கு முதலமைச்சராக இருக்கும் போது சிங்களவர்களுக்கு வடக்கில் வசிக்க உரிமையில்லை என்று கூறியுள்ளார்.

அவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் சிங்களவர்களுடன் படித்து, சட்டக்கல்லூரியிலும் சிங்களவர்களுடன் கற்று 65 வருடங்கள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு வடக்கில் வசிக்க முடியாது என்கிறார் என்று கூறியுள்ளார்.