விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம்

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல், இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைளை பயன்படுத்துகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்(25ஆம் திகதியிடப்பட்ட) இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “அமெரிக்கா, கனடா ,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் அதிபர்கள், ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக அவமானகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்தக் குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை்

இலங்கையில் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஜெனிவா சாசனம் மற்றும் யுத்தம் குறித்து மனித உரிமை பேரவையில் தெளிவுபடுத்த தவறிவிட்டனர்.

சில அதிகாரிகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, ஆதாரமற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் நியமனங்கள் தாமதிக்கப்பட்டன அல்லது நிராகரிக்க்பபட்டன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.