யாழில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் - அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை 10 மணியளவில் யாழ் நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவி காவல்துறை அத்தியட்சகர் யருள் ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

இதன்போது காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இன்றைய தினம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை. அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவினுடைய முகாம், மற்றும் விடுதலைப்புலிகளின் சட்ட, மருத்துவக் கல்லூரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.