இடம்பெறும் சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது. இந்த ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் மீள திருப்புவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
ஒருசில ஊடகங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்த நல்ல விடயத்தையும் பிரசுரிப்பதில்லை. எமது குறைபாடுகளை மாத்திரமே பிரசுரித்து வருகின்றன.
அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் ஒருபோதும் ஊடகங்களை அடக்குவதற்கு முற்படப்போவதில்லை.
முச்சக்கரவண்டி, பஸ் வண்டிகளில் மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுதல் அல்லது அரிசி பிரச்சினயை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை மதிப்பிட வேண்டாம்.
மேலும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் நாங்கள் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். இந்த மாதம் முழுவதும் இந்த வேலைத்திட்டத்தை அறிவுறுத்தும் நடவடிக்கையே இடம்பெறுகிறது.
ஆனால் இலங்கை பொலிஸ், கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளதாக சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆனால் நாங்கள் இதனை பெப்ரவரியிலேயே ஆரம்பிக்கிறோம்.
பொலிஸார் சுற்று நிருபம் வெளியிட்டு முச்சக்கரவண்டி, பஸ்வண்டிகளின் மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றும்போது, கிளீன் சிறிலங்கா என்பது இதுதானா என மக்கள் எண்ண தொடங்கியுள்ளனர்.
எனவே கிளீன் சிறிலங்கா என்பது இதுவல்ல. அது பாரிய வேலைத்திட்டம். அது படிப்படியாக முன்னெடுக்கப்படும்போது மக்கள் எங்களை விளங்கிக்கொள்வார்கள் என தெரிவித்தார்.