போதைப் பொருள் உற்பத்தி செய்வதற்கான இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களை இரண்டு கொக்குகள் மித்தெனியவிற்கு கொண்டு சென்று போட்டனவா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கொள்கலன்கள் துறைமுகங்களுக்கு வந்தவுடன் துறைமுக கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த கொள்கலன்களை நிறுத்தி பரிசோதனை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொள்கலன்கள் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளினால் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பத்திரிகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புலனாய்வுப் பிரிவுகள் ஏற்கனவே இவ்வாறான புலனாய்வு தகவல்களை வெற்றிகரமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவை மையமாகக் கொண்ட புலனாய்வு அமைப்பொன்று இந்த தகவல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு தகவல் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் கொள்கலன்கள் துறைமுகத்தில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தியதாக அரசாங்க பத்திரிகையாக சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.
பரிசோதனை செய்யப்பட்ட கொள்கலன்கள் எவ்வாறு விடுவிக்கப்பட்டன? இந்த சம்பவங்களுக்கு ராஜபக்சக்கள் பொறுப்பா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துறைமுகத்தை, பொலிஸாரை, சுங்கப் பிரிவை, திட்டமிட்ட குற்றக் கும்பல்களை ராஜபக்சக்கள் கட்டுப்படுத்தினால் இந்த அரசாங்கம் எதற்கு என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
துறைமுகத்தில் பரிசோதனை செய்யப்படாது கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச ரீதியான புலனாய்வு தகவல்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் எம்மீது குற்றம் சுமத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.