கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்கு நாமலே காரணம் ..!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார் என கட்சி எதிர்பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு செயற்பட்ட போதிலும் அதன்பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஷ செவிமடுத்ததாகவும் அதனால்தான் அவர் ஜனாதிபதியாக தோல்வியடைந்ததாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது செயற்பாடுகளுக்காக கட்சி உறுப்பினர்கள் மீது பழியை சுமத்த முற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன கடுமையாக சாடியுள்ளார்.