ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!


நாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தேசிய விவசாயிகள் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் நேற்றையதினம்(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அந்த சங்கம்,

நாட்டில் பெரும்போக அறுவடை இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது.

இத்தகைய பின்னணியில் வெள்ள அனர்த்தத்தின் காரணமாகவும் விவசாய நிலங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று உரம் உரிய காலப்பகுதியில் கிடைக்கப் பெறாமை காரணமாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக இம்முறை பெரும்போகத்தில் 24-25 இலட்சம் மெற்றிக்தொன் நெல்லையே பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது.

ஆனால் கடந்த காலங்களில் 25-30 இலட்சம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் எடுத்து நோக்கும்போது இவ்வருடமே வரலாற்றில் முதற்தடவையாக மிக குறைந்தளவு பெரும்போக நெல் அறுவடையாக பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக ஒக்ரோபர் மாதமாகும் போது பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுகின்றது  எனவும் தெரிவித்தது.