இலங்கை வரும் கனேடியர்களுக்கான எச்சரிக்கை!

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கைக்கான பயண ஆலோசனையின் பாதுகாப்புப் பிரிவை கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.அந்தவகையில் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடிய தனது நாட்டின் பிரஜைகளை எச்சரிக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்தினால் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய பயண வழிகாட்டலிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதற்கமைய இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.சுகாதாரம் உட்பட பொதுச் சேவைகள் வழங்குவதை பொருளாதார ஸ்திரமின்மை பாதிக்கலாம் என தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், இலங்கைக்கு பயணிக்கும் தனது நாட்டு பிரஜைகளுக்கு நீண்ட இடையூறுகள் ஏற்பட்டால் உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை கையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் மளிகைக் கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகளை அனுபவிக்கலாம் என்றும் பயண ஆலோசனையில் கனடா குறிப்பிட்டுள்ளது.அத்தோடு உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான தகவல்களைப் பெற உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்குமாறு கனடா தனது பயண ஆலோசனையில் வலியுறுத்தியுள்ளது.