பல கோடி பெறுமதியான வாகனங்கள் சிக்கின : பிரபல அரசியல் வாதியின் உறவினருக்கு தொடர்பு

 

 சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும், மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு இந்த வாகனங்கள் சொந்தமானவை என பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு வாகனங்களில் மொன்டெரோ வகை ஜீப் மற்றும் கேரவன் வகை வேன் ஆகியவை அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு, பண்டாரகம வீதாகம பகுதியில் ஒரு நபருக்கு சொந்தமான சந்தேகத்திற்கிடமான வேன் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், அந்த வேன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வேனில் பொருத்தப்பட்டுள்ள பதிவு இலக்கம், ஹொரணை மில்லனிய பகுதியில் உள்ள மற்றொரு வாகனத்திற்கு சொந்தமானது எனவும், அது சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஒருவரால் பயன்படுத்தப்படும் வாகனம் எனவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட ஜீப் வாகனத்தில் உள்ள பதிவு இலக்கம், மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி முறைமையில் தரவுகளை மாற்றி, தயாரிக்கப்பட்டது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.