வவுனியா படுகொலை..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது: விசாரணையில் வெளியாகிய தகவல்

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 31ம் திகதி மாலை குறித்த நபரை தேடிச்சென்ற ஆயுதம் தாங்கிய குழுெவான்று அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்டுத்துவக்கினால் அவர் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டும், அதன் பின் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையாளிகளால் இவரது கையை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டு பிறிதொரு இடத்தில் வீசப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரஞ்சா என்றழைக்கப்படும் ஜோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யபட்டவராவர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் காவல்துறையினருடன் இணைந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விசாரணைகளையடுத்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இடியன் துப்பாக்கி சிதம்பரபுரம் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 4 வாள்கள், இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு குழுவினருக்குமிடையில் ஏற்பட்டிருந்த நீண்ட நாள் பகையும், அதன் காரணமாக அவ்வப்போது இடம்பெற்ற மோதல்களின் தொடர்ச்சியாகவே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த 7 பேரில் ஒருவர் காயம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய 6 பேரும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.