காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ள 5 நாடுகள்!


அன்பை அள்ளிப்பரிமாறும் உன்னத நாளாக உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் விளங்குகிறது.

பெப்ரவரி மாதம் அனைவராலும் தமது அன்புக்குரியவர்களுடன் அன்பை பரிமாறும் உன்னத நாளான காதலர் தினம் இன்று (14) உலகவாழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகமே இன்று அன்பால் விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையிலே, காதலர் தினக்கொண்டாட்டங்கள் இடம்பெறக்கூடாது என்றும் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் உலகின் 5 நாடுகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன.

அந்தத் தடை உத்தரவை மீறி கொண்டாடினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தடை விதிக்கும் அளவுக்கு காதலர் தினம் கொண்டாடுவது என்ன அவ்வளவு மோசமானதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்ளும் காதலர் தினத்தன்று இந்த ஐந்து நாடுகளில் மட்டும் காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த முதல் நாடாக சவுதி அரேபியா விளங்குகின்றது, இந்த நாட்டில் காதலர் தினம் கொண்டாடப்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இளைஞர்கள் கெட்டுப்போய் விடுகிறார்கள் என்ற நம்பிக்கை இந்நாட்டில் பல காலமாகவே இருந்து வந்தாலேயே காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மலேசியாவும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது, மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இங்கே காதலர் தினம் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றைத் தொடர்ந்து அடுத்த இடத்தில், உஸ்பெகிஸ்தான் நாடும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது, உஸ்பெகிஸ்தான் நாட்டில் பாபரின் பிறந்தநாள் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதனால், கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காதலர் தினக் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என பாகிஸ்தான் அறிவித்து காதலர் தினக் கொண்டாட்டங்களிற்கு தடை விதித்துள்ளது. இதனால் பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை இந்த நாளில் கொண்டாடுவதில்லை.

இந்த வரிசையில் அடுத்த இடைத்தை ஈரான் பிடித்துள்ளது, இந்த நாட்டில் 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் காதலர் தினத்தை கொண்டாட கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது, காதலர் தினத்தை சீரழிவு விழாவாக ஈரான் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அந்நாளில் காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.