கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்க கடற்படைக் கப்பல் நேற்று (11.10.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

103 மீற்றர் நீளமுள்ள இந்தப் கப்பலில் 24 பேர் கொண்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் யுஎஸ்என்எஸ் பிரன்சுவிக் அக்டோபர் 15 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது.

யுஎஸ்என்எஸ் பிரன்சுவிக் என்ற கப்பல், ஆறாவது ஸ்பியர்ஹெட்- கிளாஸ் விரைவு போக்குவரத்து கப்பலாகும், துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் விரைவான போக்குவரத்துக்காக, அமெரிக்காவின் 7வது கடற்படைப் பகுதியில் உள்ள மூன்று விரைவு போக்குவரத்துக் கப்பல்களில் பிரன்சுவிக் கப்பலும் ஒன்றாகும்.

35 (மணிக்கு கடல் மைல்கள்) வேகத்தில் 1,200 கடல் மைல் தூரத்திற்கு 600 தொன் உபகரணங்களை எடுத்துச் செல்லும் திறனை இந்த கப்பல் கொண்டுள்ளது.