புடினால் புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை துணைத்தளபதியை கொலை செய்த உக்ரைன்..!



ரஷ்ய கடற்படையின் துணைத் தலைவர் உக்ரேன் எல்லைக்கு அருகே கொல்லப்பட்டதாக ரஷ்ய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

 மார்ச் மாதம் ஜனாதிபதி விளாடிமிர் புடினால் சிரேஷ்ட  கடற்படை பதவிக்கு நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் மிகைல் குட்கோவ், உக்ரேனின் சுமி பிராந்தியத்தின் எல்லையான மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் "போர் பணி"யில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தபோதும் இந்த நடவடிக்கை குறித்து அமைச்சகம் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

 குட்கோவின் மரணம், உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து மொஸ்கோவிற்கு ஏற்பட்ட மிக உயர்ந்த இழப்புகளில் ஒன்றாகும்.


ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள பிரிமோர்ஸ்கி பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் கோசெமியாகோவின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் மேலும் பத்து பேர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்ப்படுகின்றது.

கோசெமியாகோ டெலிகிராமில் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அங்கு குட்கோவை "தனது கடமையைச் செய்யும் போது" இறந்த ஒரு விசுவாசமான அதிகாரி என்று விவரித்தார்.

இந்த தாக்குதல் குறித்து உக்ரேன் அதிகாரபூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதேநேரம் உக்ரேன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண ரஷ்யா விரும்புவதாகவும், ஆனால் தங்கள் முக்கிய இலக்குகளிலிருந்து பின்வாங்க முடியாது என ஜனாதிபதி ட்ரம்பிடம் ரஷ்யாவின் விளாடிமிர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.