யாழில் இரு பாடசாலை மாணவிகள் வன்புணர்வு..! 72, 73 வயதுடைய முதியவர்கள் 2 பேர் கைது


யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 73 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த முதியவர் சிறுமியுடன் நெருங்கி பழகினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயது மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 72 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பாதிப்புக்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணைகளின் பின்னரே முழுமையான விவரம் கிடைக்கப் பெறும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்