யாழில் திருட சென்ற வீட்டில் மது அருந்தி உறங்கிய இருவர்..! ஒருவர் மடக்கி பிடிப்பு - மற்றையவர் தப்பியோட்டம்


வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் மற்றையவர் தப்பியோடியுள்ளார்.

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியே சென்று இருந்த சமயம் இரவு நேரம் வீட்டினுள் திருடும் நோக்குடன் இருவர் உள்நுளைந்துள்ளனர்.

திருட சென்ற வீட்டிலையே ஆழ்ந்த உறக்கம்

வீட்டினுள் திருட சென்றவர்கள் வீட்டில் மதுபான போத்தல்களை கண்டு வீட்டில் சமைத்து மது அருந்தி உள்ளனர்.

மது அருந்தியவர்கள் நிறை போதையில் திருட சென்ற வீட்டிலையே ஆழ்ந்த உறக்கம் கொண்டுள்ளனர்.

காலையில் வீட்டார் வந்து பார்த்த போது, வீட்டினுள் இருவர் மது அருந்திய நிலையில் உறக்கத்தில் இருப்பதனை கண்ணுற்று சத்தம் போட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.

சத்தம் கேட்டு எழுந்த திருடர்கள் இருவரும் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

தப்பி ஓடியவர்களை அயலவர்கள் துரத்தி சென்ற போது ஒருவர் மாத்திரமே அகப்பட்டுக்கொண்டார். மற்றையவர் தப்பி சென்றுள்ளார்.

மடக்கி பிடிக்கப்பட்டவரை வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஊரவர் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணைகளின் போது குறித்த நபர் சுன்னாகம் பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவருடன் கூட வந்தவர் மூளாய் பகுதியை சேர்ந்தவர் எனவும்  அவருக்கு ஏற்கனவே நீதிமன்ற பிடியாணை உள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.