பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்த மகிந்த! தடுத்து நிறுத்திய இருவர்.... திரைமறைவில் நடந்த காய்நகர்த்தல்கள்


பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருந்ததாகவும் எனினும், இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 ஆம் திகதி அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்வதற்கு முன்னர் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்கவிருந்தார்.

அப்போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க உட்பட சிலர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதை அடுத்து பிரதமர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் பதவியில் இருந்து விலகினால், தானும் அரசியலில் இருந்து விலக போவதாக பிரசன்ன ரணதுங்க கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் பதவி விலகும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். இதன் பின்னர் பிரதமரை தவிர ஏனைய அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பெருந்திரளான மக்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், அரசாங்கம் பல்வேறு வகையிலும் திணறி வருகிறது.


இந்நிலையில், அண்மையில் பிரதமர் மகிந்தவை தவிர, ஏனைய அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.