இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

ஹபரணை - மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று  காலை தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து பொலன்னறுவை பொது  வைத்தியசாலையிலும், ஹபரணை பிரேதச  வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கவிலிருந்து சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.