படப்பிடிப்பிற்காக மட்டுப்படுத்தப்படும் மலையக தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

திரைப்படம் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக கொழும்பு (Colombo) மற்றும் கண்டியில் (Kandy) இருந்து வரும் மலையக தொடருந்து சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் (Bandarawela) நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

மலைநாட்டுத் தொடருந்து மார்க்கத்தில் எல்ல மற்றும் தெமோதரை தொடருந்து நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள 9 வளைவு பாலத்தில் இலங்கை - இந்தியக் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்பட ஒளிப்பதிவு நடவடிக்கைகளுக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றிலிருந்து (09.10.2024) எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஒன்பது வளைவு பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக தொடருந்து சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நாளாந்த தொடருந்து சேவை பதுளை வரை பயணிக்காது எனவும், எதிர் திசையில் செல்லும் தொடருந்துகள் இக்காலப்பகுதியில் பதுளைக்குப் பதிலாக எல்ல அல்லது பண்டாரவளையில் இருந்து புறப்படும் எனவும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.