அரச பேருந்தை மோதித் தள்ளிய தொடருந்து - கிளிநொச்சியில் கோர விபத்து


கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 8.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி பயணித்த அரச பேருந்து, தொடருந்து கடவையை கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த யாழ் ராணியுடன் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தின் நடத்துனர் மற்றும் அதில் பயணித்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது தொடருந்து கடவையை கடப்பதற்காக நின்ற பொறியியல் பீட பீடாதிபதியின் வாகனம் மீதும் பேருந்து மோதியுள்ளது. குறித்த தொடருந்து கடவைக்கு பாதுகாப்பு கடவை இல்லையெனவும் சமிக்ஞை மாத்திரமே உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் நகர் பகுதியில் அதிகளவான தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள், யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் என்பன அங்கு காணப்படும் நிலையில் பாதுகாப்பு கடவை அமைக்கப்படாமையினால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் கூறுகின்றனர்.

குறித்த பகுதியில் பாதுகாப்பு கடவை இல்லாமையினால் கடந்த காலங்களில் தொடருந்து விபத்துக்களில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் பாதுகாப்பு கடவையை அமைக்குமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.