திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்...! சட்டத்தரணிகளை அவமதிக்கும் விதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக வழக்கு...!

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணை மற்றும் அதற்காக செயற்பட்ட சட்டத்தரணிகளை அவமதிக்கும் விதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரநாதன் தெரிவித்தார்.

திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் நேற்றையதினம்(21) இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்றினை பிறப்பித்திருந்தது. 

குறித்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரநாதன் முன்னிலையாகியிருந்தார்.

குறித்த வழக்கின்போது பரிபாலனசபை உறுப்பினர்களுக்கு எதிராக பெறப்பட்ட கட்டாணை தொடர்பிலும், அதற்கு சார்பாக செயற்பட்ட சட்டத்தரணிகளுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், நேரடியாகவும் கருத்துக்கள் வெளியிட்டு வருபவர்களுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரநாதன்,  மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்களிடம் தெரிவித்துள்ளார்.