மருதானையில் ஆயுதங்களுடன் மூவர் கைது: பின்னணியில் வெளியான தகவல்

மருதானை, லொக்கேட்லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக எதிரணி குழுக்களைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்வதற்காக ஆயுதங்கள் இந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து, விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (10) குறித்த பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ போதிராஜாராமய விகாரைக்கு பின்புறம் உள்ள வீடொன்றில் சோதனை நடத்தினர்.

அங்கு வீட்டின் மேற்கூரையின் பின்பகுதியில் உள்ள பயணப்பையில் வைக்கப்பட்டிருந்த டி-56 ரக தானியங்கி துப்பாக்கி, 14 தோட்டாக்கள் கொண்ட மகசீன், வாள், கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மருதானை பிரதேசத்தில் வசிக்கும் 18, 34 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானை லொக்கேட்லேன் மற்றும் வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக, எதிரணியினரைக் கொல்வதற்காக குறித்த ஆயுதங்கள் இந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.