எரிபொருள் நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் மூவர் கைது

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

ஒமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் வீதியிலே பல நாட்களாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இளைஞர் குழுவினர் ஒன்றிணைந்து புதிதாக ஒரு புதிய வரிசையினை ஏற்படுத்தியதுடன், இன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட போது தங்களது வரிசையினருக்கே எரிபொருளினை வழங்க வேண்டும் எனத் தெரிவித்து சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்திருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன், காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் பொல்லுகளினை மீட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.