தப்பிச் செல்ல முயன்ற முக்கிய அரசியல்வாதியின் மனைவி : கொழும்பில் அதிரடியாக கைது

முன்னாள் இராஜாங்க  அமைச்சர் துனேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார,கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

வர்த்தக நிறுவனங்கள் பலவற்றின் பணிப்பாளராகவும் தொழிலதிபராகவும் இருக்கும் குஷானி நாணயக்கார, பல வருடங்களாக 700 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமான வரியை செலுத்தாமை தொடர்பாக அவருக்கு எதிராக உள்நாட்டு இறைவரிதி திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே இவர் கைதாகியுள்ளார்.

குறிப்பிட்ட நிறுவனங்கள்தொடர்பில் பல வருடங்களாக வருமான வரித் துறைக்கு செலுத்தப்படாத வரிகள் தொடர்பாக அவருக்கு பல சந்தர்ப்பங்களில் அழைப்பாணைகள் அனுப்பப் பட்டன.

ஆனால் அவர் அந்த ஆழைப்பாணைகளின் பிரகாரம் செயற்படாத காரணத்தால், அந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கமைய, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கமைய பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

அவரை கைது செய்வதற்காக அவர் தங்கியிருந்த நாரஹேன்பிட்டியிலுள்ள வீடொன்றுக்கு அதிகாரிகள் சென்ற போது, அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோதும், அதனை முறியடித்து அதிகாரிகள் அவரை கைகது செய்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த  துனேஷ் கங்கந்த, மகிந்ததவின் பக்கம் தாவி   சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவியாற்றி இருந்தமை குறிப்பிடபத்தக்கது.