சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றமடைந்துள்ளது - பிரதமர் மஹிந்த

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு தாமரை தடாக அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்கவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை என்றும், தமது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது தமது எதிர்பார்ப்பும், பொறுப்புமாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.