அணையா விளக்கு போராட்ட களத்தில் ஏற்பட்ட பதற்றம் - விரட்டப்பட்ட முக்கிய அரசியல்வாதிகள்


செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
 

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

 
இதற்கமைய இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு  தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 

இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

 
இறுதி நாள் போராட்டமாக நடைபெறுகிற இன்றைய போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவிலானோர் கலந்து  கொண்டிருந்தனர். 

இதனிடையே செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஆகியோருக்கு எதிராக போராட்டக்காரர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.


இதேபோன்று அப்பகுதிக்கு சென்ற இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் போராட்டக்காரர்களால் அங்கிருந்து அனுப்பப்பட்டிருந்தார்.



இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இதன் போது ஐ.நா ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.