விடுதலைப்புலிகள் உட்பட 15 அமைப்புகளின் சொத்துகளை முடக்கியது இலங்கை அரசு


பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (03) வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 15 பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவர்களது 210 கூட்டாளிகளின் அனைத்து நிதிகள், பிற சொத்துக்கள் மற்றும் பொருளாதார ஆதாரங்கள் அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வு கழகம் அல்லது TRO, தேசிய தவ்தீஹ் ஜமாத் அல்லது NTJ, ஜமாதே மிலாத் இப்ராஹிம் அல்லது ஜேஎம்ஐ ஆகிய அமைப்புகளின் நிதிகள் மற்றும் சொத்துக்கள் உட்பட 15 அமைப்புகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

 
மேலும், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 113 பேரின் அனைத்து பணம் மற்றும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.